தல வரலாறு

சோழநாட்டுத் திருவாரூர் மாவட்டத்து நீடாமங்கலம் வட்டத்திலுள்ள ஒரு சிற்றூர் முன்னாவல்கோட்டை. ஊரின் நடுவில் குளம் அதன் மேல்கரையில் சிறிய சிவாலயமான காளத்தீஸ்வரர் திருக்கோயில்.ஏறத்தாழ ஆயிரம் ஆண்டு கால வரலாற்று சுவடுகளை தன்னுள் பொதித்துக்கொண்டு சிவாலயமும்,பிடாரி கோயிலும், திருக்குளமும் கம்பீரமாக உள்ளன. சோழர் காலத்தில் இவ்வூர் முய்ங்காவல் என்ற பெயரால் அழைக்கப்பெற்றது. தன் கண்ணையே ஈசனுக்கு தந்து சிவப்பேறு பெற்ற கண்ணப்ப நாயனார் வழிபாடு செய்த திருத்தலம் திருக்களத்தியாகும். அங்கு உறையும் ஈசனின் திருநாமம் காளத்தீஸ்வரர் என்பதாகும். பின்னாளில் அப்பெயரினையே முய்ங்காவல் மாதேவர்க்கு சூட்டி காளத்தீஸ்வரர் திருக்கோயில் என அக்கோயிலை அழைக்கலாயினர்.இறைவியின் திருநாமம் காமாட்சி என்பதாகும். இத்திருக்கோயில் பற்றிய செய்திகள் ராஜேந்திர சோழன் ஆட்சிக்காலத்தில் வழங்கிய புத்தூர் செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.