தல பெருமை
சோழ வள நாட்டின் கோயில் நகராம் திருக்குடந்தையின் மையப் பகுதியில் அருள்மிகு உச்சிப்பிள்ளையார் திருக் கோயில் அமைந்துள்ளது. தரைமட்டத்திலிருந்து சுமார் 20 அடி உயரத்தில் இருந்து இப்பிள்ளையார் அருள்பாலிக்கின்றார்.வடக்கு திசைநோக்கி இந்திருக்கோயில் அமைந்துள்ளது. புகழ், வலி, கவ்வி, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்லூழ், நுகர்ச்சி, அறிவு, அழகு, பெருமை, இளமை, துணிவு, நோயின்மை, வாழ்நாள் என்னும் பதினாறுப் பேறுகளைக் குறிக்கும் வண்ணம் பதினாறு படிக்கற்கள் அமைந்துள்ளன. இவற்றைக் கடந்து சென்றால் எண்வகை பாக்கியங்களை நினைவூட்டும் வகையில் அர்த்த மண்டபம் கருவறையில் ஞானத்தின் பேர் உருவாய் அமர்ந்து பிள்ளையார் அருள்பாலிக்கின்றார். அர்த்த மண்டபத்தில் ஸ்ரீ விநாயகர், உற்சவ விநாயகர், ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். வலம் வருவதற்குத் கருவறையை திருச்சுற்று அமைந்துள்ளது.