ஒருவில் ஒருசெல் ஓரில் உலகினில் என்று காட்டக் கருவில் கருவாய்த் தோன்றிக் கோசலை வயிறு தித்தே உருவில் உயிராய் மற்றெம் உடலாய் விளங்கி நிற்கும் திருப்பாப்புலியூர் வரதராஜப்பெருமாள் போற்றி.......
வைணவ சமயத்தில் எம்பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கின்ற நிலைமைகளை ஐந்து வகையாகப்பகுத்துக் கூறுவர், அவற்றைப் பரம் என்பது எம்பெருமான் வைகுந்தத்தில் வாசம் செய்வதையும், வியூகம் என்பது திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டு அருள் சுரக்கப் பல திருநாமங்களுடன் விளங்கி வருவதையும், மண்ணுலகில் பற்பல அவதாரங்கள் எடுத்ததை விபவம் என்றும் நம் உள்ளத்தே எழுந்தருளி இருப்பதை அந்தர்யாமி என்றும் எல்லாத் திருக்கோயில்களிலும் எழுந்தருளி இருப்பதை அர்ச்சை என்றும் கூறுவர்.
இவற்றில் பக்தர்கள் எந்த இடத்திலும் எல்லாக் காலத்திலும் வந்து சேவித்து அருள் வேண்டி நிற்குமாறு குடிகொண்டுள்ள அர்ச்சை நிலையே நாம் கண்டு...ஒருவில் ஒருசெல் ஓரில் உலகினில் என்று காட்டக் கருவில் கருவாய்த் தோன்றிக் கோசலை வயிறு தித்தே உருவில் உயிராய் மற்றெம் உடலாய் விளங்கி நிற்கும் திருப்பாப்புலியூர் வரதராஜப்பெருமாள் போற்றி.......
வைணவ சமயத்தில் எம்பெருமான் குடிகொண்டு அருள்பாலிக்கின்ற நிலைமைகளை ஐந்து வகையாகப்பகுத்துக் கூறுவர், அவற்றைப் பரம் என்பது எம்பெருமான் வைகுந்தத்தில் வாசம் செய்வதையும், வியூகம் என்பது திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டு அருள் சுரக்கப் பல திருநாமங்களுடன் விளங்கி வருவதையும், மண்ணுலகில் பற்பல அவதாரங்கள் எடுத்ததை விபவம் என்றும் நம் உள்ளத்தே எழுந்தருளி இருப்பதை அந்தர்யாமி என்றும் எல்லாத் திருக்கோயில்களிலும் எழுந்தருளி இருப்பதை அர்ச்சை என்றும் கூறுவர்.
இவற்றில் பக்தர்கள் எந்த இடத்திலும் எல்லாக் காலத்திலும் வந்து சேவித்து அருள் வேண்டி நிற்குமாறு குடிகொண்டுள்ள அர்ச்சை நிலையே நாம் கண்டு இன்புறத்தக்கதாகும்.
எம்பெருமான் தம்பேரருளால் விக்ரகத்திலும் அவதரித்து இறங்கிக் காட்சி தருவதே அர்ச்சை எனப்படும் அர்ச்சா ரூபாகும். அத்தகைய அர்ச்சாவதாரமாகப் பல திருக்கோயில்களில் பெருமாள் எழுந்தருளி அருள்பாளிக்கின்றார்.
அத்தகைய சீர்மைபெற்ற திருக்கோயில்களில் கடலூர், திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வரதராஜப்பெருமாள் திருக்கோயிலும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
இத்திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப்பெருமாள் திருக்கோயில் திருக்கோவிலூர் உலகளந்தபெருமாளின் அபிமான ஸ்தலமாகக் கருதப்படுகிறது. இந்நகரம் கருடநதி என்று வழங்கப்படும் கெடில நதியின் தென்கரையில் அமைந்துள்ளது. அருள்மிகு வரதராஜப்பெருமாள் திருக்கோயில் கடலூர் நகரின் மேற்கெல்லையில் அமைந்துள்ளது. கடலூர் பேருந்து மற்றும் திருப்பாதிரிப்புலியூர் இரயில் நிலையங்களிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் திருவந்திபுரம் செல்லும் சாலையின் பக்கத்திலேயே இத்திருக்கோயில் அமைந்துள்ளது.
பெருமாள் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் நின்ற கோலத்தில் வரதராஜன் எனும் திருநாமம் கொண்டு காட்சி அளிக்கிறார். தாயாரின் திருநாமம் பெருந்தேவித்தாயார் என்பதாகும்.
ஆலயத்துள் நுழைந்ததுமே ஓங்கி உயர்ந்த துவஜஸ்தம்பமும் அதன் கீழே உள்ள பலிபீடமும் நம்மை வரவேற்கின்றன.
நமக்கு இடப்புறமாக ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. எதிரே உள்ள இராமர் சன்னதியில் எழுந்தருளி உள்ள கோதண்டராமரை நோக்கிக் கைகூப்பிய நிலையில் சேவித்தவாறு ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். மிகப்பெரிய கீர்த்தி கொண்ட இராமதூதன் மிகச்சிறிய மூர்த்தியாக எளிய நிலையில் இங்குக் காட்சி தருகிறார்.
ஆண்டுதோறும் இத்திருக்கோயிலில் நடைபெறும் உற்சவங்களில் அனமத் ஜெயந்தியும் ஒன்றாகும். அந்த உற்சவத்திருநாளில் ஆஞ்சநேயருக்கு 10008 வடைமாலை சாத்தும் திருவைபவம் நடைபெறுகிறது. அன்று சொல்லின் செல்வனான அனுமன் சன்னதி முழுவதுமே வடைகளாகக் காட்சி அளிக்க நடுவில் மாருதி நின்று அருள்பாலிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
ஆஞ்சநேயர் சன்னதிக்கு நேர் எதிரே தெற்கு நோக்கியவாறு இராமபிரான் சன்னது அமைந்துள்ளது. சீதா இலட்சுமண ஆஞ்சநேயர் சமேதராகக் கோதண்டராமர் எனும் திருநாமம் தாங்கிஎழுந்தருளி உள்ள இராமபிரான் மிகவும் சக்தி வாய்ந்தவர் ஆவார். இத்திருக்கோயிலை இராமர் கோயில் என்றும் அழைக்கும் அளவிற்கு இங்கு குடிகொண்ட இராமபிரான் பழமைவாய்ந்தவர் ஆவார்.
தென் இலங்கையை வென்ற இராமபிரானுக்கு ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரத்தில் வழிபாடும் பாசுரம் சேவித்தலும் நடைபெறுகின்றன. ஸ்ரீராமநவமியில் தொடங்கி ஜனன உற்வமாக 11 நாட்கள் தொடர்ந்து உற்சவமும், தினந்தோறும் வீதி புறப்பாடும், இராமாயண சொற்பொழிவுகளும் நடைபெறுகின்றன. இத்திருக்கோயிலில் கொண்டாடப்படும் சீதா கல்யாண உற்சவம் மிகச் சிறப்பான ஒன்றாகும்.
ஆஞ்சநேயர் சன்னதிக்கும் இராமர் சன்னதிக்கும் இடையில் கிழக்கு மேற்காக அமைந்துள்ள மண்டபத்தில் எம்பெருமானின் தசவதாரக் கோலங்கள் சுதை சிற்பங்களாக ஒவ்வொரு தூணிலும் அமைக்கப்பட்டுள்ளன.
மூலமூர்த்தியான வரதராஜப்பெருமான் சன்னதிக்கு எதிரில் பெருமாளுக்கு எதிர் சேவையாகக் கூப்பிய கரங்களுடன் பெரிய திருவடி என்று பெயர் பெற்ற கருடாழ்வார் நின்று கொண்டு அருள்பாலிக்கிறார். கருடநதி எனப்படும் கெடில நதிக்கு மிக அருகில் அமைந்துள்ள இச்சன்னதி மிகவும் புகழ் பெற்றதாகும்.
கருடஸ்தலம் என்று கூறப்படும் அளவுக்கு இந்த ஆலயத்தில் கருட ஜெயந்தியன்று வேதம் வல்லார்களைக் கொண்டு ஹோமம் வளர்த்து கருட உற்சவம் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு வியாழக்கிழமை மற்றும் ஸ்வாதி நட்சத்திரத்தில் வேதபுருஷனான கருடாழ்வாருக்குச் சிறப்பான வழிபாடு நடைபெற்று வருகிறது.
இத்திருக்கோயிலில் நமக்கெல்லாம் குமிழ் சிரிப்போடு காட்சிதந்து அருள்பாலிக்கும் வரதராஜப் பெருமாளைக்கண்டு துதித்துக் கொண்டே இருக்கலாம் என்று எண்ணத் தோன்றும், இத்திருக்கோயிலில் ஆனி மாதம் பூரத்தில் தொடங்கி சுவாதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அதில் தங்கக் கருடசேவை விசேஷமானதாகும்.
பெருமாளின் கருவறைக்கு இடப்புறம் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் நாச்சியாரின் சன்னதி அமைந்துள்ளது. மார்கழி மாதம் முழுவதும் இங்கு திருப்பாவை சொற்பொழிவு நடைபெறுகிறது. அதுவும் கார்த்திகை மாதக் பேசப்படுவது இங்கு மட்டுமே நடைபெறுகிறது. மார்கழி கடைசிநாளில் நடைபெறும் ஆண்டாள் திருக்கல்யாணம் மிகமுக்கியமான ஒன்றாகும்.
மூலவரை சேவித்துவிட்டு வெளியில் வந்தால் பிரகாரத்தில் பெருமாள் சன்னதிக்கு வலப்புறமாக பெருந்தேவிதாயார் சன்னதி தனியாக அமைந்துள்ளது. தாயார் அமர்ந்த கோலத்தில் அடியவர்களுக்கு வேண்டுவனவற்றை அள்ளிக் கொடுத்துக் கொண்டு அழகாகக் காட்சியளிக்கிறார்.
தாயாருக்கு ஆடிமாதம், தை மாத வெள்ளிக்கிழமைகளில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. மேலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையும் கோயில் புறப்பாடு நடைபெறுகிறது.
பெருமான் சன்னதியின் சுற்றுப்புறச் சுவர்களில் ஸ்ரீராதாகிருஷ்ணன், ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர், ஸ்ரீலட்சுமி நரசிம்மன், ஸ்ரீலட்சுமிவராகர் ஆகியோரின் சிறுவடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது.ஒவ்வொரு சுவாதியிலும் நரசிம்மப் பெருமானுக்கு மாலை வேளையில் நடக்கும் சிறப்பு வழிபாடு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
தாயாரை வழிபட்டு வடக்கு நோக்கித் திரும்பி வருகையில் பெரிய திருமஞ்சன மண்டபம் உள்ளது.
மாசிமக உற்சவத்தின் போது திருக்கோவிலூர் உலகளந்தப் பெருமாள் கடலூரில் உள்ள தேவனாம்பட்டினம் கடற்கரைக்குத் தீர்த்தவாரி காண எழுந்தருள்வார். அச்சமயம் அப்பெருமான் இச்சன்னதிக்கும் எழுந்தருளி அடியவர்களுக்கு அருள்பாலிப்பார். மேலும் ஓங்கி உலகளந்த திருவிக்கிர சுவாமிக்கு இம்மண்டபத்தில்தான் திருமஞ்சன நீராட்டு நடைபெறும். மகத்தீர்த்தவாரிக்கு மறுநாள் உலகளந்தபெருமாள் தங்க கருட வாகனத்திலும் சேர்ந்து திருவீதி உலாவருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.
திருமஞ்சன மண்டபத்திற்கு எதிரே நீளமான பெரிய மண்டபம் ஒன்று அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் தென்புறம் வடக்கு நோக்கியவாறு விஷ்ணு துர்க்கை எழுந்தருளி உள்ளார். இங்கு உள்ள தூண்களில் அஷ்டலட்சுமி அவதாரங்கள் சுதை சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன. திருமஞ்சன மண்டபத்தின் இடப்புறம் தல விருட்சமான பலாமரமும் அதன் அடியில் துளசி மாடமும் உள்ளன.
அங்கிருந்து கிழக்கு நோக்கி வந்தால் மகா ஆச்சாரியரான மணவாள மாமுனிகள் சன்னதி அமைந்துள்ளது. ஒவ்வொரு மூல நட்சத்திரம் அன்றும் மணவாள மாமுனிகளுக்குச் சிறப்பான வழிபாடும் கோயில் புறப்பாடும் நடைபெறுகின்றன. மேலும் ஆழ்வார் பெருமக்கள் பன்னிருவர் அவதரித்த திருநட்சத்திர உற்சவங்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
மேலும் இத்திருக்கோயிலில் அமைந்துள்ள சிறிய கருடாழ்வார் வாகனம் சிறப்பான ஒன்றாகும். ஒவ்வொரு திருவோண நாளிலும் மாலைவேளைகளில் பெருமாள் இவ்வாகனத்தில் எழுந்தருளி கோயில் புறப்பாடாக சேவை சாதிக்கிறார். எம்பெருமானிடம் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொளபவர்களும் இப்புறப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தி அருள் வேண்டுவதால் இந்த கருடாழ்வார் பிரார்த்தனை கருடன் என்று துதிக்கப்படுகிறார்.
இத்திருக்கோயிலில் நாள்தோறும் பகல் 12 மணிக்குப் பெருமாளுக்கு உச்சிகால பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாகத் தயிர் சாதம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் ஆட்சிக்குட்பட்ட இத்திருக்கோயில் நாள்தோறும் அரசின் அன்னதானத்திட்டத்தின் கீழ் அன்னதானம் நடைபெற்று வருகிறது. கடந்த பல ஆண்டுகளாக இத்திருக்கோயிலில் வைணவ மாநாடு நடந்து வருகிறது.
ஒவ்வொருவரும் வாழ்வில் ஒருமுறையேனும் இத்திருக்கோயிலுக்கு வந்து வரதராஜப் பெருமாளைச் சேவித்து அருள்பெறும் பாக்கியத்தைப் பெற வேண்டும்.