Arulmigu Vaithiyanathaswamy Temple, Thirumalapadi - 621851, Ariyalur District [TM025230]
×
Temple History
தல வரலாறு
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே
- சுந்தரமூர்த்தி சுவாமிகள்
தென்னாடாகிய தமிழ்நாட்டில் சிவபெருமான் உறையும் கோயில்கள் பல. அவற்றுள் சைவ சமயக் குரவர்களால் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில்கள் 274 உள்ளன. அவைகளுள் என்றும் வற்றாத புதுப்புனலையுடைய பொன்னி என்னும் காவிரிநதி பாயும் சோழ நாட்டில் காவிரியின் தலைமகளாம் கொள்ளிடத்தின் வடகரையில் அரியலூர் மாவட்டத்தில்...பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே
- சுந்தரமூர்த்தி சுவாமிகள்
தென்னாடாகிய தமிழ்நாட்டில் சிவபெருமான் உறையும் கோயில்கள் பல. அவற்றுள் சைவ சமயக் குரவர்களால் தேவாரப் பாடல் பெற்ற திருக்கோயில்கள் 274 உள்ளன. அவைகளுள் என்றும் வற்றாத புதுப்புனலையுடைய பொன்னி என்னும் காவிரிநதி பாயும் சோழ நாட்டில் காவிரியின் தலைமகளாம் கொள்ளிடத்தின் வடகரையில் அரியலூர் மாவட்டத்தில் 54வது தலமான திருமழபாடி என்னும் சிறந்த தலம் உள்ளது. இதற்குத் திருமழுவாடி, மழுவை, ராஜராஜவளநாடு, பொய்கைநாடு, இராஜேந்திர சிங்க வளநாடு, தியாகவல்லி வளநாடு, பரசுநர்த்தனபுரம், தாலவனம் ஆகிய வேறு பெயர்கள் உள்ளன.
முற்காலத்தில் வெள்ளாற்றிற்கும் வடகாவிரிக்கும் இடையில் உள்ள பகுதி மழநாடென்றும், வடகரை மழபாடி நாடென்றும், அதை ஆண்டுவந்த மன்னர்கள் மழவராயர் என்றும், தேவார பாடல்களில் மழபாடி என்பதே காணப்படுகிறது. இத்தலத்தைப் பற்றிய தமிழ்ப் புராணத்தில் இத்தலம் பனைமரத்தை மிகுதியாகக் கொண்டிருந்தால் தாலவனம் என்றும், மார்க்கண்டேய முனிவருக்குச் சிவபெருமான் காட்சி தந்து மழு என்னும் படையைத் தாங்கி ஆடல் செய்தருளிய காரணத்தால் மழுவாடி எனப் பெயர் ஏற்பட்டதென்றும் வரலாறுகள் வழங்கப்படுகின்றன. வடமொழியில் பரசு நர்த்தனபுரம் என்று வழங்கப்படுகிறது.
மருமலர் மழைகடூவி வானவர் வணங்கியேத்தக்
கருமழை யனைய கூந்தற் கவுரிகண்டினிது போற்றப்
பொருமழு வங்கையேந்திப் புனிதநின் றாடலாலே
பெருமழு வாடியென்னும் பெயர்பெறுமந்த மூதூர்- தலபுராணம்
கோயில் அமைப்பு
கொள்ளிடத்தின் வடகரையில் நதியின் பக்கத்திலேயே இக்கோயில் அமைந்துள்ளது. காவிரின் தலைமகளாம் கொள்ளிட நதி இவ்விடத்தில் உத்தரவாகினியாய் வடக்கு நோக்கிச் செல்கிறது. கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. முன்னே ஓர் பெரிய கோபுரம் ஏழுநிலை மாடங்களுடன் விளங்குகிறது. உள்ளே 3 பிரகாரங்கள் உள்ளன. வெளியில் தேரோடும் வீதி உள்ளது. சுவாமி கோயில் தென்புறத்தில் உள்ளது. அம்மனுக்கு 2 சந்நிதிகள் உள்ளன. ஒன்று நடராஜர் சந்நதிக்குப் பக்கத்திலும், மற்றொன்னு வடபுறத்திலும் உள்ளன. சுவாமி-சுந்தராம்பிகை என்னும் இரண்டு சந்நிதிகளும் கிழக்கு நோக்கியுள்ளன.
பாலாம்பிகை
பாலாம்பிகை சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. இத்திருமேனி எந்தப் பக்கம் இருந்து நாம் பார்த்தாலும் நம்மைப் பார்த்து புன்னைகை செய்வது போன்று இருக்கும். இத்திருமேனி மிகவும் பழமையானது.
மூர்த்திகளின் பெயர்கள்
இத்தலத்தில் வீற்றிருக்கும் பெருமானுக்கு வைத்தியநாதர், வச்சிரதம்பேசுவரர், வைரத்தூண் நாதர் மழுவாடீசர் என்னும் பெயர்கள் வழங்குகின்றன. அம்பிகை சுந்தராம்பிகை அழகம்மை, பாலாம்பிகை என்றும், விநாயகர் சுந்தர விநாயகர் என்றும் வழங்கப்பெறுவர். இந்த விநாயகர் நின்ற தோற்றம் உடையவர்.
சந்திரனுக்குண்டான கயநோயைப் போக்கியதால் வைத்தியநாதர் என்றும், புருஷாமிருக முனிவரால் பிரதிட்டை செய்யப்பெற்ற மூலலிங்கத்தைப் பிரமன் பெயர்த்தெடுக்க முயன்றபோது வச்சிரதம்மாக வைரத்தூணாக விளங்கியதால் வச்சிரதம்பேசுவரர், வைரத்தூண் நாதர் என்றும் பெயர்கள் வழங்கலாயின.
ஜூரஹரர்
இங்கு உள்ள மூர்த்திகளில் ஜூரஹரர் என்னும் சிவலிங்கத் திருமேனி மிகச்சிறப்பு வாய்ந்த்து. ஜூரம் நிற்காத நிலையில் இந்த இறைவனுக்கு புழுங்கல் அரிசியில் ரசம் சாதம் செய்து படைத்தால் நோய் நீங்குதல் உறுதி.
தீர்த்தங்கள்
1.இலக்குமி தீர்த்தம்
இது அம்மன் சந்நிதிக்கு எதிரில் உள்ளது. அம்பிகையின் கருணைக்கு அறிகுறியாக்க் குளிர்ச்சியாயும் இனிய சுவையுடனும் விளங்குகிறது. திருமகளாகிய இலக்குமிக்கு ஒரு முனிவர் சாபத்தால் ஏற்பட்ட சரும நோய் நீங்கியதால் இத்தீர்த்தம் இலக்குமியின் பெயரால் விளங்குகிறது.
2.சிவகங்கை
இது கொள்ளிட நதியுடன் கலந்து விட்டது. கோயிலுக்கு முன்னே படித்துறையின் பக்கமாய் இருந்தது.
3.கொள்ளிடம்
வடகாவிரி இந்நதி இவ்விடத்தில் வடக்கு நோக்கிச் உத்திரவாகினியாய் செல்கிறது. இதனால் இத்தலம் காசியினும் உயர்வாகக் கருதப்படுகிறது.
தலப் பெருமைகள்
ஊருக்கு கிழக்கில் கொள்ளிட நதிக்கரையில் கோயில் அமைந்துள்ளது. மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றிலும் சிறப்புடையது. மார்க்கண்டேய முனிவருக்கு வைகாசி விசாக நாளில் சிவபெருமான் வடிவுடை மழுவேந்திக் காட்சி கொடுத்தாடியது. இலக்குமி, சந்திரன் இவர்களுக்கு நோய் நீங்கப் பெற்றது. நந்திகேஸ்வரருக்கும் ஊர்மிளாதேவிக்கும் திருமணம் நடைபெற்ற இடம். நிறைந்த கல்வெட்டுகளையுடைய மூலவர் லிஙகம் புருஷாமிருக முனிவரால் பிரதிட்டை செய்யப் பெற்றது. கோயிலில் நவக்கிரகங்கள் இல்லை. அதற்குப் பதிலாகச் சுவாமி சந்நிதியில் மூன்று குழிகள் உள்ளன. சிபிச்சக்கரவர்த்திக்கு நவக்கிரக தோஷங்கள் நீங்கிய இடம். நான்கு திசைகளிலும் ஐயனார் கோயில்கள் உள்ளன.
தேவார ஆசிரியர் மூவராலும் பதிகம் பாடப்பெற்ற பெருமை உடையது மழபாடி. மழபாடியை நினைக்க மறந்தாயோ என்று சுந்தரமூர்த்தி நாயனார்க்குச் சிவபெருமான் கனவில் நினைப்பூட்டிய சிறப்பை உடையது.
மழபாடிப் பெருமானின் மாண்புகள் தேவாரப் பாடல்களில் மிகுந்துள்ளன. மழபாடி மன்னும் மணாளன் என்றும், மழபாடி வயிரத்தூணே என்றும், மழபாடியுள் மாணிக்கமே என்றும் திருநாவுக்கரசரும், சுந்தரமூர்த்தி நாயனாரும் இறைவனைப் போற்றியுள்ளார்கள். மழபாடியைத் தலையினால் வணங்கத் தவமாகுமே என்று ஞானசம்பந்தர் துதித்துள்ளார்.
சிற்பச் சிறப்புகள்
இக்கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் வடிவம் ஒரே கல்லினால் ஆனது சிற்ப வடிவில் உள்ளது. கல்யாணசுந்தரர், அகோர வீரபத்திரர், கஜசம்ஹாரமூர்த்தி, சுந்தரகணபதி, பாலாம்பிகை, சுந்தராம்பிகை, துர்க்கை காத்யாணி ஆகிய மூர்த்திகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. காத்யாயனி, நந்திகேஸ்வரர், ஊர்மிளாதேவி, அகஸ்தியர், சுந்தரர் முதலியோரின் உருவங்கள் சிலையில் ஆக்கப் பெற்றுள்ளன. இவை மிகவும் பழமையானவை.
தல பெருமை
அரியலூர் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் திருமழபாடி. இவ்வூர் அரியலூருக்குத் தெற்கே முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ளதாகும். திருமானூர் ஒன்றியத்தைச் சார்ந்தது. தேவாரம் பாடிய மூவராலும் பாடப்பெற்ற ஊராதலின் நாடறி நல்லூராகச் சிறப்பு பெற்றதாகும். இவ்வூரின் வரலாற்றுச் செய்திகளை தொகுத்துப் பார்ப்பதே இப்படைப்பின் நோக்கமாகும்.வரலாற்று அடிப்படையில் நெடிய வரலாற்றைக் கொண்ட இடம் திருமழபாடி. கோயிலும் அத்தகைய வரலாற்றைப் பெற்றதே. அரியலூர் மாவட்டத்தில் தேவாரப் பாடல் பெற்ற இடங்கள் திருமழபாடி, கீழப்பழூவூர், கோவிந்தப்புத்தூர் ஆகிய மூன்று இடங்கள் மட்டுமே. கீழப்பழூவூர் திருஞான சம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்ற தலமாகும். கோவிந்தப்புத்தூர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவராலும் பாடப் பெற்ற இடமாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற இடம்...அரியலூர் மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊர் திருமழபாடி. இவ்வூர் அரியலூருக்குத் தெற்கே முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்துள்ளதாகும். திருமானூர் ஒன்றியத்தைச் சார்ந்தது. தேவாரம் பாடிய மூவராலும் பாடப்பெற்ற ஊராதலின் நாடறி நல்லூராகச் சிறப்பு பெற்றதாகும். இவ்வூரின் வரலாற்றுச் செய்திகளை தொகுத்துப் பார்ப்பதே இப்படைப்பின் நோக்கமாகும்.வரலாற்று அடிப்படையில் நெடிய வரலாற்றைக் கொண்ட இடம் திருமழபாடி. கோயிலும் அத்தகைய வரலாற்றைப் பெற்றதே. அரியலூர் மாவட்டத்தில் தேவாரப் பாடல் பெற்ற இடங்கள் திருமழபாடி, கீழப்பழூவூர், கோவிந்தப்புத்தூர் ஆகிய மூன்று இடங்கள் மட்டுமே. கீழப்பழூவூர் திருஞான சம்பந்தரால் மட்டுமே பாடல் பெற்ற தலமாகும். கோவிந்தப்புத்தூர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவராலும் பாடப் பெற்ற இடமாகும். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற இடம் திருமழபாடி மட்டுமே.