தல வரலாறு
அருள்மிகு நீலமேகப்பெருமாள் திருக்கோயிலுடன் இணைந்த இரண்டு திருக்கோயில்கள் ஆகும். ஒன்று ஸ்ரீ ஆஞ்சநேயர் திருக்கோயில், இரண்டாவது ஸ்ரீ லெட்சுமி நாராயணர் திருக்கோயில். எம்பிரான் திருக்கோயிலின் கீழ்ப்புறத்தில் அழகிய விமானத்துடன் கூடிய திருக்கோயிலில் வரப்பிரசாதியாக கரம் கூப்பி, சிரம் தாழ்த்தி நிற்பவர் சொல்லின் செல்வன், வாயு புத்திரன், அஞ்சனையின் அழகுச் செல்வனுமான சிறிய திருவடி என்று அழைக்கப்படும் ஸ்ரீ ஆஞ்சநேயர். சிறிய சிலா விக்ரகமானாலும் மிக அழகான திருவுருவம். இவரின் உருவ அமைப்பு வியாசராயர் பிரதிஷ்டித்த ஆஞ்சநேயரின் உருவ அமைப்பை ஒத்திருப்பதைப் பார்த்தால் இவருக்கு வயது அதிகம் இருக்கும்போல் தோன்றுகிறது. ஒருவேளை வியாசராயரின் திருப்பணியாக இருந்தாலும் இருக்கலாம். இவ்வியாசராயர் சுமார் என்பது இரண்டு ஆஞ்சநேயத் திருவுருவங்களை நிறுவியுள்ளதாகக் கூறப்படுகிறது.