தல வரலாறு

இத்திருக்கோயில் கருவறை அதிட்டானத்துடன் திருச்சுற்றுமாளிகை அமைத்து முற்றிலும் கல்லால் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் அதிட்டான அமைப்பு தேவகோட்டம், கும்பபஞ்சரம், கொடுங்கைச் சிற்பங்கள் போன்ற மிக எழிலார்ந்த வேலைப்பாடு அமைதியாக உள்ளது. கோவிலின் திருச்சுற்று உள்சுவரில் வெட்டப்பட்ட கல்வெட்டுகள் சடையவர்மன் குலசேகரன் (1190-1216) முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1238) பராக்கிரம பாண்டியனின் காலத்தைச் சேர்ந்தவை. இவற்றைக் கொண்டும் இக்கோயில் கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்ட தொண்மையான கோயில் என தொல்லியல் வல்லுநர் தெரிவித்துள்ளார். விக்கிரமங்கலம் சிவன் கோயில் அங்குள்ள கல்வெட்டுகளில் மதுரோதைய ஈஸ்வரமுடையார் கோயில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கோயில் அம்மனின் பெயர் சிவனேசவல்லியார் என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது சிவன்கோயிலுக்குத் தென்புறம் உள்ள அம்மன்கோயில் இடிந்த நிலையில் காணப்படுகிறது.