அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், இளையனார்வேலூர் - 631603, காஞ்சிபுரம் .
Arulmigu Balasubramaniya Swamy Temple, Ilaiyanarvellore - 631603, Kancheepuram District [TM001776]
×
Temple History
புராண பின்புலம்
காஞ்சிபுரத்தின் தென்பால் சுமார் 25கி.மீ. தொலைவில் செய்யாற்றங்கரை மேல் அமைந்திருக்கும் இளையனார் வேலூர் ஓர் அழகிய கிராமமாகும். இக்கிராமத்தின் நடுவே சிறப்புடன் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். திருக்குமரன் குடிக்கொண்டிருக்கும் இக்கோயில் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். பக்தர்களுக்கு அருள் வழங்கும் முருகன் இக்கோயிலில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி என்ற பெயருக்கு ஏற்ப இளமையுடையவராக இனியவராக காட்சி தருகின்றார்.
இத்தலத்தின் தோற்றத்திற்குக் காரணமாய் அமைந்தது முருகனில் வேலே ஆகும். அதனால் தான் இத்தலத்திற்கு வேலூர் என்று பெயர் தோன்றி மருகன் ஈசனின் இளைய குமாரன் என்பதால் இளையனார் வேலூர் என்ற பெயர் வழங்கலாயிற்று. வேலாயுதத்தால் தோன்றி மாந்தர்தம் கால பயம் அகற்றும் இத்தலம் தோன்றிதால் பின்னணியில் அருந்தவ முனிவரொருவரின் பங்கும் உண்டு அந்த...காஞ்சிபுரத்தின் தென்பால் சுமார் 25கி.மீ. தொலைவில் செய்யாற்றங்கரை மேல் அமைந்திருக்கும் இளையனார் வேலூர் ஓர் அழகிய கிராமமாகும். இக்கிராமத்தின் நடுவே சிறப்புடன் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். திருக்குமரன் குடிக்கொண்டிருக்கும் இக்கோயில் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். பக்தர்களுக்கு அருள் வழங்கும் முருகன் இக்கோயிலில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி என்ற பெயருக்கு ஏற்ப இளமையுடையவராக இனியவராக காட்சி தருகின்றார்.
இத்தலத்தின் தோற்றத்திற்குக் காரணமாய் அமைந்தது முருகனில் வேலே ஆகும். அதனால் தான் இத்தலத்திற்கு வேலூர் என்று பெயர் தோன்றி மருகன் ஈசனின் இளைய குமாரன் என்பதால் இளையனார் வேலூர் என்ற பெயர் வழங்கலாயிற்று. வேலாயுதத்தால் தோன்றி மாந்தர்தம் கால பயம் அகற்றும் இத்தலம் தோன்றிதால் பின்னணியில் அருந்தவ முனிவரொருவரின் பங்கும் உண்டு அந்த வரலாறை காண்போம்.
இஃது இவ்வாறாக காலத்தால் இவ்விருவர்க்கும் முற்பட்டவர் அத்திருவாவடுதுறை ஆதீன முனிபுங்கவர் ஈசான தேசிகர் என்பவர். இவர் திருநெல்வேலியில் அவ்வாதீனத்திற்குரிய ஈசான மடாலயத்தில் கட்டளைத் தம்பிரானாக இருந்தார். ஈசான தேசிகர் என்பது தீட்சாநாமம். இவரது இயற்பெயர் சுவாமிநாத தேசிகர் என்பது. சிவஞான யோகிகட்கு முன்னர் திருவாவடுதுறை ஆதீனத்தில் வடநூற்கடலும்,தென்றமிழ்க் கடலும் நிலைகண் டுணர்ந்திருந்த முனிவர் இச்சுவாமிநாத தேசிகரே. இவர் தமது இருமொழிப் புலமையால் இலக்கணக்கொத்து என்னும் சீரியநூல் ஒன்றைச் செய்துள்ளார். அஃது ஒன்றே இவரது இருமொழிப் புலமைக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும். இந்நூல் காரணமாக இவரை, இலக்கணக் கொத்து சுவாமிநாத தேசிகர் என்று கூறுதல் வழக்கமாயிற்று.
அதன் சுருக்கம் வருமாறு :
காசிப முனிவர் சேயாற்றங் கரையில் தங்கி உலக நலத்தினபொருட்டு ஒரு வேள்வி செய்யத் தொடங்கியபொழுது, மலையன், மாகறன் என்னும் இரு அசுரர்கள் அவ்வேள்வியை அழிக்கத் தொடங்கினார்கள். (இவ்விரு அசுரர்கள் இறைவனைப் பூசித்து அழியாவரம் பெற்றமையாலே மாகறல் என அத்தலம் பெயர் பெற்றது என்பதும் அப்புராணத்திற் சொல்லப்பட்டது.) அதனால் இன்னலுற்ற காசிப முனிவர் கடம்பர் கோயிலை அடைந்து ஆவுடை நாயகியோடு உடனாகிய திருக்கடம்ப நாதரைப் பூசிக்க, அவர் முனிவருக்குக் காட்சியளித்து, முருகக் கடவுளால் அசுரர்களை அழிவித்து வேள்வியை முற்றுவிப்போம் என்று வரங்கொடுத்தருளினார். அவ்வமயம் முருகக் கடவுள் திருமாகறலில் சிவபெருமானது ஐராவணம் என்னும் யானைமேல் ஏறி உலாப்போந்து திருவிளையாடல் புரிந்திருந்தார். அதனால், திருக்கடம்ப நாதர் நந்தி தேவரால் அவரை அழைப்பித்து தாம் காசிப முனிவருக்கு வரமளித்தமையை அருளிச்செய்து, அசுரரை அழித்து, வேள்வியைமுடிப்பிக்குமாறு கட்டளையிட்டு, வாட்படை ஒன்றை வழங்கியருளினார்.
முருகக் கடவுள் தாம் நல்லுரை பல கூறியும் கேளாது எதிர்த்துவந்த மலையன், மாகறன் என்னும் இருவரில் முன்னர் வந்த இளையவனாகிய மாகறனை முதற்கண் அவன் படைவீரர் பலரையும் அழித்து தனியனாகச் செய்தார். அவனும் பெரும்போர் புரிந்து இளைத்து இறுதியில் ஊழித் தீயாகியும், பேரிருளாகியும், மற்றும் பெருங்கடல், பெருங்காற்று,பேய், பூதம் முதலாகப் பல வடிவங்கள் கொண்டான். அதனால் அவனது மாயைகள் பலவும் அழிதற்பொருட்டு முருகப்பெருமான் தமது கையில் இருந்த வேலாயுதத்தை நோக்கி, நீ சென்று காசிப முனிவரது வேள்விச் சாலைக்குக் கீழ்த்திசையில் ஊன்றி நின்று, அசுரனது மாயையை எல்லாம் போக்கு என்று கட்டளையிட்டு ஏவினார். அங்ஙனம் அவ் வேலாயுதம் சென்று ஊன்றி நின்ற இடமே இன்றும் வேலூர் என வழங்கப் பெறுகின்றது.
இதனைக் குறிப்பிடும் கடம்பநாத புராணப்பாடல் பின்வருவது :
நாதன் ஈதுகண் டின்னவன் மாயையும்
நவிற்றுமந் திரவீறும் பூத லத்தினில் அழிந்திடத் திருக்கரம்
பொருந்தும்வேற் கிதுகூறும் தீது தீர்த்துநீ கீட்டிசை உறைகெனச்
செப்பிவேல் விடுத்திட்டான் போதன் விட்ட வேல் பொருந்திடந் தனைப்புவி புகலும்வே லூரென்றே
வேலின் கோடி சூரியர் ஒத்த பிரகாசத்தால் மாகறனது மாயை பலவும் அழிய, முருகப்பெருமான் சிவபெருமான் தந்த வாளாயுதத்தால் அவன் தலையை வீழ்த்தித் தேவர், முனிவர் முதலியோரது இடரை நீக்கினார். அசுரன் மாயையைப் போக்கிய வேலின் ஒளியால் சராசரங்களெல்லாம் வெப்பமுற்று வாடின. மக்கள் பசியாலும், தாகத்தாலும் சாம்பினர். அதையறிந்த திருக்கடம்பநாதர் தாமே ஒரு சிவனடியார் போலத் தோன்றி பந்தல் அமைத்துப் பலர்க்கும் அன்னதானம் செய்பவர் போல வந்து அன்னம் அளித்து, அனைவரது பசியையும் தாகத்தையும் நீக்கி மறைத்தார். அது கண்ட அனைவரும் அதிசயம் உற்றனர். வேலின் வெப்பமும் தணிந்தது. அதன்பின் மூத்தவனாகிய மலையன் என்பவன் தன் தம்பி இறந்தமைக்கு வருந்திச் சூரபதுமனது தாயாகிய மாயை என்பவளைத் தியானித்து அவள் வந்து உபதேசித்த ஒரு மாயா மந்திரத்தைப் பெற்றுக்கொண்டு வந்து முருகப் பெருமானை எதிர்த்து தன் படைகளையெல்லாம் இழந்து தனியனானான். அதன்பின் அவன் மாயையிடம் பெற்ற மந்திரத்தால் முருகன் பக்கத்தில் இருந்த வீரவாகு முதலிய படைவீரர் பலரையும் வேறோரிடத்திற் கொண்டுபோய் மயங்கிக்கிடக்கச் செய்து, தன்னைப் போல முருகனையும் தனியனாக்கித் தேவாத்திரங்களால் போர் புரிந்தான். அவர்களையெல்லாம் முருகப்பெருமான், சிவபெருமான் தந்த வாளாயுதத்தால் அவனை வெட்டி வீழ்த்தினார் மலையன் அழிந்த களம் மலையான்களம் எனவும், அவன் போர்புரிந்த இடம் செம்புலம் எனவும், முருகப் பெருமான் படையுடன் எழுந்தருளியிருந்த பாசறை, இரும்புலம் எனவும் பெயர் பெற்றன. (மலையான்களம், இப்பொழுது மலையான்குளம் என வழங்குகின்றது. புராணத்திலும், மற்றும் பல இடங்களிலும் இரும்புலம் என இடையின ரகரமே காணப்படுகின்றது. எனினும், பாசறை என்ற பொருளில் இறும்புலம் என வல்லின றகரமே இருந்திருத்தல் கூடும்.) மலையன் அழிந்தபின் முருகப் பெருமான் ஞானாத்திரத்தால் தமது படைகளை வருவித்துக்கொண்டு பங்குனி மாதம், சுக்கிலபட்சம், மக நட்சத்திரத்தோடு சுக்கிலபட்சம் பிரதோடம் கூடிய நன்னாளில் கடம்பர் கோயில் சென்று இந்திரனால் விசுவகர்மனை அழைப்பித்து திருக்கடம்ப நாதருக்கு எல்லா அமைப்போடுங் கூடிய ஆலயம் அமைத்து, அதனைச்சூழ நல்ல நகரத்தையும் உண்டாக்கித் தமது வேலால் சேயாற்றை அழைத்துச் சிவபெருமானை முறைப்படி பூசிக்க, அவர் தோன்றிக் காட்சியளித்து, குமாரனே, காசிபன் வேள்வியை முற்றுவித்து, அதன் பின் உனது வேல் ஊன்றிய வேலூரில் இருந்து வழிபடுவோர் பலர்க்கும் நல்ல வரங்களைத் தந்துகொண்டு, ஆண்டுதோறும், பங்குனி மகச் சுக்கிலபட்சப் பிரதோட நாளில் நம்மை வந்து வழிபட்டிருக்க, என்று அருள்புரிந்தார். அதன்படியே முருகப்பெருமான் காசிபரது வேள்வியை முற்றுவித்து இளையனார் வேலூரில் எழுந்தருளி அன்பர் பலர்க்கும் அருள்புரிந்து விளங்குகின்றார்.
இளையனார் வேலூர்க் கோயிலில் வடகிழக்கு மூலையில் ஒரு சிவலிங்க மூர்த்தியாய்க் கடம்பநாதர் எழுந்தருளியிருப்பது, அம்முருகன் நாள்தோறும் அவரை வழிபட்டுக்கொண்டிருக்கின்றான் என்னும் கருத்துடையதே. வடமேற்கு மூலையில் அங்கு ஊன்றிய வேலாயுதம் சிலா வடிவில் வழிபடப்படுவதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. இச் செய்தியையும் குறிக்கும் கடம்பநாத புராணப் பாடல் வருமாறு :
இளையனார் வேலூர் என்றப் பதிப்பெயர் இயம்ப வும், பூந் தளையவிழ் மலர்சூழ் வாவித்
தடாகமும் செழித்துச் செந்நெல் விளையவும், வசித்தோர், கண்டோர், மேவினோர் வினைகள் யாவும் களையவும் இளையோன் எண்ணிக் கருணைகொண் டினித மர்ந்தான்.
காஞ்சிபுரத்தில் மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் முறையே காமாட்சியம்மை கோயில், ஏகாம்பரநாதர் கோயில் கச்சபேசர் கோயிலில் கொடியேறிப் பெருந்திருவிழா நடப்பதுபோல, மாகறல், கடம்பர் கோயில், இளையனார் வேலூர் என்பவற்றில் முறையே மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் கொடியேறிப் பெருந்திருவிழா நடைபெறும். ஆகவே, கடம்பர் கோயிற் பெருந்திருவிழா, ஏகாம்பரநாதர் கோயில் பெருந்திருவிழாவோடு ஒத்து நடக்கும். அவ்விழாவில் எட்டாம் நாள் திருவிழாவே மக நட்சத்திரமும், பிரதோடமும் கூடியதாய் இருக்கும். அந்நாளில் ஆண்டுதோறும் இளையனார் வேலூர் முருகர் அங்கிருந்து கடம்பர் கோயிற்கு எழுந்தருளுவார். வழியில் பல ஊர்களில் மண்டபப் படிகள் சிறப்பாக நடைபெறும். கடம்பர் கோயிலை முருகக் கடவுள் அடைந்தவுடன் அக்கோயிலின் பண்டக சாலைத் திறவுகொல் வேலூர்க் கோயிலாரிடமே தரப்படும். அன்று மாலை அபிஷேக ஆராதனை முதலிய எல்லாம் வேலூர்க் கோயிலாரது செலவிலேயே நடைபெறும். இரவு சம்மார உற்சவம் சிறப்பாக நிகழும். பத்துநாள் விழாவில் இந்த எட்டாந்திருவிழாவே பெருந்திரளான மக்கள் கூடிக் கண்டுகளிக்கும் பெருவிழாவாகும். இவ்விழாவிற்கு எழுந்தருளுமாறு இளையனார் வேலூர் முருகருக்குக் கடம்பர் கோயிலிலிருந்து திருமுகம் செல்வது வழக்கம். மாகறல் தேர்த் திருவிழா, கடம்பர் கோயில் எட்டாந்திருவிழா, இளையனார் வேலூர்த் தேர்த்திருவிழா, இவை அந்த வட்டாரத்தில் மிகச் சிறப்பாக மக்களிடையே கருதப்படுவன.