தல வரலாறு
புண்ணிய பூமியாகிய பாரத தேசத்தில் மூர்த்தி, தலம், தீர்த்தம் மஹிமை வாய்ந்த ஷேத்திரங்களில் மிக உயர்ந்ததும் காசிக்கு சமமானதுமான மயிலாடுதுறைக்கு மேற்கிலும், தேரழந்தூர் ஸ்ரீ தேவராஜப்பெருமாள் ஸ்ரீ வேதபுரிஸ்வரர் கோயிலுக்கு கிழக்கிலும், வழுவூர் ஸ்ரீ வீரட்டேஸ்வரர் ஸ்தலத்திற்கு வடக்கிலும், சித்தர்கள் அருள்புரிகின்ற சித்தர்காடு தலத்திற்கு தெற்கிலும் அமைந்துள்ள அஹில்வனம் என்கிற அசிக்காடு கிராமத்தில் முன்னொரு காலத்தில் பரமேஸ்வரன், மஹாவிஷ்ணு இருவரும் சொக்கட்டான் ஆடி பரமசிவன் தோற்றார். நடுவரான பார்வதி உண்மையை சொல்ல தாமதித்ததினால் கோபமடைந்த சிவபெருமான் உமையவளை பசுமாடாகவும், ஸ்ரீ விஷ்ணுவை கோரட்சகராக யாதவராகவும் ஆக கடவது என சாபமிட, அன்னை பார்வதி வாத்ஸல்யத்துடன் தனது சுவர்ணங்களால் லிங்க பிரதிஷ்டை செய்து பூஜித்த தலமே அசிக்காடு ஆகும்.