கைலாய மலையில் சிவபெருமான் தியானத்தில் ஆழ்ந்திருந்த சமயம், அவரது தியானத்திற்கு எவ்விதமான இடையூறும் ஏற்படாதவாறு சிவகணங்களில் ஒருவரான பிருங்கி முனிவர் காவல் செய்து கொண்டிருந்த பொழுது மன்மதன் பிருங்கி முனிவருக்குத் தெரியாமல் கைலாயத்திற்குள் நுழைந்து சிவபெருமானின் தியானத்தை கலைத்தான்.
...கைலாய மலையில் சிவபெருமான் தியானத்தில் ஆழ்ந்திருந்த சமயம், அவரது தியானத்திற்கு எவ்விதமான இடையூறும் ஏற்படாதவாறு சிவகணங்களில் ஒருவரான பிருங்கி முனிவர் காவல் செய்து கொண்டிருந்த பொழுது மன்மதன் பிருங்கி முனிவருக்குத் தெரியாமல் கைலாயத்திற்குள் நுழைந்து சிவபெருமானின் தியானத்தை கலைத்தான்.
இதனால் தியானம் கலைந்து எழுந்த சிவபெருமான் காவல் பணியை சரியாக செய்யாத பிருங்கி முனிவரை கோபமுடன் நோக்கி, நீ கைலாய பதவியை இழந்து பூலோகம் செல்வாய் என்று சபித்தார். அதன்படி பூலோகத்திற்கு வந்த பிருங்கி முனிவர் மீண்டும் கைலாய பதவியைப் பெற தவம் செய்வதற்காக சிறந்த இடம் தேடி சுருளி மலைப்பகுதிக்கு வந்தார். அங்கிருந்த சிறிய குகை ஒன்றில் மீண்டும் கைலாயப்பதவி வேண்டி தவமிருந்தார். இவரது தவத்தைக் கண்ட முருகப்பெருமான் அவர் முன்பு தோன்றி, அவருக்கு மீண்டும் கைலாயப் பதவி கிடைக்க அருள்புரிந்தார்.பிருங்கி முனிவருக்கு முருகன் காட்சியளித்த இடத்தில் தான் இந்த கோயில் அமைந்துள்ளது. பிருங்கி முனிவர் தவம் செய்த குகை இக்கோயிலின் கீழ்பகுதியில் உள்ளது. இது கைலாசப்புடவு என்றும், கைலாயக்குகை என்றும் அழைக்கப்படுகிறது.
சனிதோசம் நீங்கும் இக்கோயிலில் வழிபடுபவர்களுக்கு சனிதோஷம் குறைந்து நற்பலன்கள் கிடைக்கும் என்பதும் ஒரு நம்பிக்கை. சனீஸ்வரபகவான் உக்கிரப்பார்வையில் பாதிப்படைந்த முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிகளும் தங்களை காப்பாற்ற வேண்டி சுருளிமலையில் இருக்கும் சுருளிவேலப்பர் என்று அழைக்கப்பெறும் முருகப்பெருமானிடம் தஞ்சமடைந்தனர். முருகப்பெருமானும் சனீஸ்வரபகவானின் உக்கிரப்பார்வையைக் குறைத்து தன்னிடம் தஞ்சமடைந்த தேவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கச்செய்து அருளினான். இதனால் இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு சனிதோஷம் நிவர்த்தியாகும்.
ஸ்தல சிறப்பு
ஓம் வடிவில் இத்திருக்கோயில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். சிலப்பதிகாரத்தில், கற்புக்கரசி கண்ணகி மதுரை எரித்த பின் கோட்டையின் மேற்கு வாயிலில் புறப்பட்டு வைகைகரை வழியாக நடந்து சுருளிமலையில் கோயிலை வழிபட்டு பின் கண்ணகி கோட்டம் மலை உச்சியிலிருந்து விண்ணுலகம் சென்றடைந்தார். இச்செய்தியை சொல்லவரும் இளங்கோவடிகள் நெடுவேள்குன்றம் அடிவைத்து ஏறி, என்று குறிப்பிட்டு சொல்கிறார்.
திருக்கோயிலின் மேல்பகுதியிலிருந்து உருவாகும் சுருளிதீர்த்தம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இந்த தீர்த்தம் ஒரு மரத்தின் வேர்பகுதியில் இருந்து உருவாகிறது. இந்த தீர்த்த நீருடன் மஞ்சள் நிறத்திலான பாசி போன்ற பொருள் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்த தீர்த்தம் உருவாகும் இடத்தில் உள்ள இடத்தில் உள்ள இலைகள் அழுகாமல் கல்லாய் மாறுதல் அடைந்து விடுகிறது. இது தொடர்பான பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குழந்தை இல்லாத பக்தர் ஒருவருக்கு சுருளிவேலப்பரே மகன் ஸ்தானத்தில் இருந்து இறுதி சடங்குகள் செய்து வைத்தார் என்பது ஐதீகம். எனவே ஆண் வாரிசு இல்லாதவர்களும், இறுதி காலத்தில் ஆறுதல் தேடுபவர்களும் சுருளிவேலப்பரை தங்கள் மகனாக ஏற்று வழிபடுகின்றனர்.
சித்திரை முதல்நாள், ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி நாட்களில் பக்தர்கள் அருவியில் தீர்த்தமாடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். சுவாமிக்கு விஷேச பூஜை நடக்கும். கல்லாக மாறிய மரத்திலிருந்து விபூதி விழுந்து கொண்டே இருக்கும். விபூதி குகைஅமைந்துள்ளது. இங்கு முருகன் சுருளிவேலப்பராகவும், சிவன் மற்றும் விநாயகருடன் அருள் பாலிக்கிறார். இங்கு கைலாசகுகை, விபூதி குகை, கன்னிமார் கோயில் முதலானவைகள் அமைந்துள்ளன.