


தல பெருமை
முப்பந்தல் அமைவிடம் முக்கடலும் சங்கமிப்பதும் சான்றுகளுக்கும் புராணத்திற்கும் முன்னோடி என ஆன்றோர்களாலும் சான்றோர்களாலும் உரைக்கப்படும் தமிழக தென்முனையாம் கன்னியாகுமரி மாவட்டம் என்பது உலகில் முதல்முதலாய் உயிரினம் தோன்றிய லெமூரியாகண்டம் அமைந்த இடம் என்பதும் ஐந்து வகை நிலங்களில் குறிஞ்சி , முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால் வகை நிலங்களும் கொண்ட மாவட்டமும் ஆகும் . இச்சிறப்பு மிக்க மாவட்டத்தில் முப்புறமும் பொதிகை மலை சூழ, பன்னீர் பசும்சோலைகளும், நன்னீர் தென்னை சோலைகளும் ...முப்பந்தல் அமைவிடம் முக்கடலும் சங்கமிப்பதும் சான்றுகளுக்கும் புராணத்திற்கும் முன்னோடி என ஆன்றோர்களாலும் சான்றோர்களாலும் உரைக்கப்படும் தமிழக தென்முனையாம் கன்னியாகுமரி மாவட்டம் என்பது உலகில் முதல்முதலாய் உயிரினம் தோன்றிய லெமூரியாகண்டம் அமைந்த இடம் என்பதும் ஐந்து வகை நிலங்களில் குறிஞ்சி , முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நால் வகை நிலங்களும் கொண்ட மாவட்டமும் ஆகும் . இச்சிறப்பு மிக்க மாவட்டத்தில் முப்புறமும் பொதிகை மலை சூழ, பன்னீர் பசும்சோலைகளும், நன்னீர் தென்னை சோலைகளும் திருவுடன் அருளும் அமைய பெற்று மூவேந்தர்களுள் சேரன்தம் கணவாயாம் ஆரல்வாய்மொழி என்ற ஆரல்வாய்மொழியின் கிழக்கே 2 கி.மீ தொலைவிலும் திருநெல்வேலி செல்லும் சாலையில் அமைந்துள்ளது முப்பந்தல். முப்பந்தல் பெயர்க்காரணம் தமிழுக்கும் தமிழர்தம் சிறப்புக்கும் , பலகலைகளுக்கும் பெருமை சேர்த்த மூவேந்தர்களாம் சேர, சோழ, பபண்டிய மன்னர்கள் நாட்டால் வேறுப்பட்டாலும் நாமெல்லாம் தமிழர் என ஔவைப்பிராட்டியின் அறிவுரைப்படி மூவேந்தர்களும் இவ்விடத்தில் பந்தல் அமைத்து தங்கி ஔவைப்பிராட்டியுடன் அளவளாவிய இடம் என்பதால் முப்பந்தல் என பெயர் பெற்றது என செவிவழிச்செய்திகள் தெரிவிக் கின்றன திருக்கோயிலுக்கு கிழக்கே அவ்வையார் அம்மனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது சிறப்பாகும் ஸ்தல வரலாறு இத்திருக்கோயில் தற்பொழுதுள்ள இடத்தின் வடக்கே சுமார் 5 கி. மீ துரத்தில் பழவூர் என்ற கிராமம் உள்ளது . அவ்வூர் முன்பு சிவாலய சிறப்புடன் மட்டுமல்ல கலை ஆர்வத்திலும் சிறந்து விளங்கியது . இவ்வூரில் 61 கன்னியரை கொண்ட ஆடல் பாடலில் தேர்ந்த தேவதாசிகள் கூட்டம் ஒன்று இருந்தது இக்கூட்டத்தின் தலைவி சிவகாமி, பார்ப்போர் மயங்கும் எழிலும் , பரத நாட்டியத்திலும் தன்னிகரின்றி வாழ்ந்தாள். தமக்கு வயது முதிர்ந்த காரணத்தால் தமது குழந்தைகள் மணிவண்ணன் , லட்சுமியை தமது தொழிலுக்கு தகுதிபெற செய்ய எண்ணி மணிவண்ணனை மிருதங்கத்திலும் லட்சுமியை பரதநாட்டியத்திலும் சிறந்த வித்தகர்களாக்கினாள். இவர்களது அரங்கேற்றம் பழவூர் சிவாலயத்தில் அரங்கேறியது. பழமையும் சிறப்பும் மிக்க பழவூர் சிவாலயம் பக்திக்கு மட்டுமின்றி அருங்கலைகளை வளர்த்ததில் பெரும் பங்கு வகித்தது. இத்திருக்கோயிலில் அர்ச்சகர் சிவதொண்டர் அவருடைய அழகிய மேனியில் திரூநீறு அணிந்து எந்நேரமும் தேவாரம் ஓதினார். கோயிலின் சிறப்பிற்கு இவர் காரணமா என்பது புரியாத புதிர் மக்களுக்கு நடன அரங்கேற்றத்தின் போது சலங்கை ஒலிக்க லட்சுமி வந்தாள். கண்டார் அர்ச்சகர் இருவருக்கும் காதல் மலர்ந்தது காதலில் தம்மை மறந்து நின்றார். மணிவண்ணனின் மிருதங்கமோ இடியென ஒலித்தது சலங்கை கணீர் கணீர் என ஒலிக்க ஆடினாள் லட்சுமி. தன்னை மறந்த அர்ச்சகரோ பரத ஒலி கண்டு மகுடி முன் பாம்பானார் அவரது நிலை கண்ட லட்சுமிக்கு காலும் புரண்டது, அர்ச்சகர் மடியில் வீழ்ந்தாள். தம்மை மறந்த அர்ச்சகர் அவளை துக்கி தம் மார்பில் அலங்கரித்த முத்துமாலையை சூட்டினார். லட்சுமிக்கு காதல் அரும்பியது இருவருக்கும் ஆதவன் தன் தொழிலை மறந்தாலும் கூட லட்சுமியை பார்க்காத நாள் இல்லை என தொடர்ந்தது காதல். கணிகைகுலத்தில் பிறந்தாலும் கற்புடன் வாழ நினைத்தாள் லட்சுமி அதனால் உம்மை தொட்ட கையால் வேறு ஆடவனை தொடேன் என உறுதி தந்தாள் அர்ச்சகருக்கு. சிலகாலம் கடந்தன அர்ச்சகர் தம் உடைமைகள் அனைத்தையும் இழந்தார் தம் உள்ளம் தளர்ந்தார் ஆனாலும் தம் அன்புக்குரியவளை மறக்க இயலவில்லை மீண்டும் அவளை காண சென்ற போது அவரது நிலை கண்ட லட்சுமியின் தாய் சிவகாமி அவரை வீட்டை விட்டு துரத்தினாள் . இதனால் மிகுந்த வேதனையடைந்து நடந்தார் காடுமலை கடந்து தளர்ந்து ஓர் கள்ளிகாட்டில் துயின்றான். இச்செய்தி அறிந்த லட்சுமியோ புழுவென துடித்தாள். தன் தாய்க்கு தெரியாமல் புறப்பட்டாள் அவரை காண ...... முடிவில் கண்டாள் கள்ளிகாட்டில் அர்ச்சகரை அன்புற தேற்றினாள் தம்மடியில் லட்சுமி தூங்க கனவுலகில் இருந்த அர்ச்சகர் பழைய நினைவு உந்த நனவுலகு மீண்டார். தாம் இழந்த செல்வங்களை மீட்க தம் அன்புகுரிய- வளையும் கொல்ல துணிந்தான். அருகிலிருந்த மணலை குவியலாக்கி அதன் மீது கிடத்தினான். ஒரு கல்லை எடுத்து அவள் மீது போட முயல திடுக்கிட்ட லட்சுமியோ பலவாறு கெஞ்சியும் கேளாது அவள் மீது கல்லை போட்டார். லட்சுமியோ கள்ளியே சாட்சி என தன் இன்னுயிரை நீத்தாள் தங்கையை காணாது தேடி வந்த மணிவண்ணன் அவளை பிணக்கோலத்தில் கண்டு அவள் மீது வீழ்ந்து அவனும் மாண்டான். லட்சுமியை கொன்ற அர்ச்சகரோ தப்பிக்க ஓடினார் .... தாகம் எடுக்கவே அருகிலிருந்த கிணற்றில் நீர் அருந்த கல் ஒன்றை நீக்கினார் அங்கிருந்த அரவம் தீண்ட அவரும் மாண்டார். இறந்த மணிவண்ணனும் லட்சுமியும் தம்பழி தீர்க்க இறைவனிடம் வேண்ட இறையும் யட்சகர்களாக பிறக்க அருளினார். அதன்படி இருவரும் குழந்தைகளாக சோழநாட்டில் பிறந்து அரண்மனையில் வளரலாயிற்று. குழந்தைகளோ இரவில் தமது யட்ச சக்தியில் ஆடு, மாடுகளையும் மக்களையும் தின்று தீர்த்தது. நாட்டின் நிலை கண்டு மனம் வருந்திய சோழ மன்னன் சோதிட விற்பன்னர்களை அணுகினார் அவர்கள் அக்குழந்தைகளை காட்டில் சென்று விட்டுவிட கூற அதன்படியே காட்டில் சென்று குழந்தைகளை விட்டான். அக்குழந்தைகளாகிய நீலன் , நீலி தாம் முற்பிறவியில் உயிர்நீத்த கள்ளிகாடு தற்பொழுது முப்பந்தல் இருக்கும் இடம் முன்பு கள்ளிகாடாக இருந்தது அடைந்து அண்ணன் நீலன் வேம்பாக மாற தங்கை நீலியோ வெறியுடன் வருவோர், போவோரை கொன்று தம் முப்பிறவி காதலனை எதிர்பார்த்து காத்திருந்தாள். இறந்த அர்ச்சகரோ மறு பிறவியில் தென்நாட்டில் மாநாயக்கசெட்டி என்பவரின் மகனாக பிறந்து வளர்ந்து வாலிபனான். அவர்கள்குல வழக்கப்படி வாணிபம் செய்ய தந்தையிடம் அனுமதிகேட்டான். அவரும் வடக்கு திசை செல்லாதே எனக்கூறி உயிர்காக்கும் பட்டையம் ஒன்றையும் கொடுத்தனுப்பினார். தந்தை சொல்லை மீறி இளம்கன்று பயமறியாது என்பதற்கேற்ப வடதிசையை நோக்கியே பயணித்தான் . காத்திருந்த நீலியோ பழிதீர்க்க கருதி குறத்தி வடிவெடுத்து கள்ளியை பிள்ளையாக்கி கையில் ஏந்தி எதிர் கொண்டாள் செட்டி மகனை நீயே என் கணவன் மணமுடித்துவிட்டு வந்துவிட்டாயே. என்னையும் பிள்ளையையும் காப்பாற்று எனக்கூற என்ன சொல்வதென்று தெரியாமல் செட்டிமகன் விழிக்க வழக்குறைத்தாள். நீலி அவள் வழக்கும் வந்தது பழவூர் கிராமத்திற்கு. கிராமத்தாரும் வழக்கை விசாரிக்க முற்கால வழக்கப்படி இருவரும் ஓரே அறையில் பூட்டப்படுகிறார்கள். அவர்கள் பேச்சிலிருந்து உண்மை புலபடும் என்பதற்காக பட்டைய மகிமையால் அவளை கொல்ல முயல நீலி கிராம காவலனிடம் அவன் தன்னை அந்த கத்தி போன்ற ஆயுதத்தால் கொல்ல கூடும் அதனால் அதை பிடுங்கவும் என கூற, கிராம காவலனும் அவ்வாறே செய்தான். நீலியோ இரவோடு இரவாக செட்டி மகன் நெஞ்சைப்பிளந்து கொன்று பழி தீர்த்தாள். பழி தீர்த்த போதிலும் கோபம் அடங்காது தாம் இருந்த முப்பந்தல் கள்ளிக்காட்டில் வருவோர், போவோரை கொன்றாள். பொதுமக்களோ அஞ்சி நடுங்கினர். இது கண்டு அந்த பகுதியில் குடிகொண்டிருந்த ஔவைப்பிராட்டி மக்கள் துயர் துடைக்க கருதி நீலியை கண்டாள். அவளை சாந்தபடுத்தி, அறிவூட்டினாள். அன்னையின் அறிவுரையை ஏற்று தம் தாயன்பு பெருக்கெடுக்க மக்களுக்கு நன்மை செய்ய அருள் கொண்டு முப்பந்தல் இசக்கியம்மனாக இன்று வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தந்து சாந்த சொரூபியாக வீற்றிருக்கிறாள். அன்னை ஔவைப்பிராட்டியுடன் முப்பந்தலில் தம்மை அண்டியோரை அருள் சுரந்து காத்துவரும் இன்றைய மூலஸ்தானம் அமைந்துள்ள இடத்திலேயே சிறிய கோயிலாக இருந்த இவ்வாலயம் இன்று பிரமாண்டமாய் நோய் நொடிகள் தீர்க்கும் சக்தியாய், குழந்தை வரம் அருளும் கர்ப்பரட்சாம்பிகையாய் அன்னை இசக்கியம்மன் வீற்றிருக்கிறாள் என்பதற்கு இவ்வாலயத்திற்கு வரும் மக்களே நற்சாட்சியாகும். அன்னையின் வரலாறு செவிவழி செய்திகள் என்றாலும் அன்னையின் அருள் சாட்சி அளப்பரியது. திருக்கோயில் அமைப்பு அன்னை இசக்கியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்திருக்க, தெற்கு மூலையில் மடப்பள்ளியும், மேற்கு பிரகாரத்தில் முருகபெருமானும், கன்னி மூலையில் கணபதியும், ஔவை பிராட்டியும் அமைந்து அருள்பாலிக்கின்றனர். கோயில் வடமேற்கு மூலையில் சுடலைமாடனும், வடகிழக்கு மூலையில் பட்டவராயரும் அமர்ந்து அருள் பாலிக்கின்றனர். இத்திருக்கோயிலின் கிழக்கு பக்கத்தில் ஔவையாரம்மனுக்கு தனிக்கோயில் பிரகாரத்துடன் அமைந்துள்ளது தனி சிறப்பாகும். திருவிழாக்கள் மற்றும் சிறப்பு அம்சங்கள் வருடந்தோறும் ஆடிமாதம் கடைசி செவ்வாய் அன்று நடைபெறும் கொடை விழா சிறப்பானதாகும் . பிரதிவாரம் ஞாயிறு , செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் பெருமளவில் வருகை தந்து அம்மன் அருள் பெற்றுச்செல்வது சிறப்பாகும். ஓளவையாரம்மன் தனிக்கோயிலுக்கு தெற்கே அக்னிமாடன் திருக்கோயில் பரிவார தேவதைகளுடன் கம்பீரமாக எழுந்தருள் பாவிக்கிறார். அக்னிமாடன் தோல் நோய் குணப்படுத்தும் அபாரசக்தியுடனும் செய்வினை, ஏவல் பில்லி- சூன்யம் அகற்றும் சக்தி மிக்கவராய் அண்டியவர்களுக்கு அனைத்து சங்கடங்களையும் தீர்த்து வைத்து அருள் பாவித்து வருவது இத்திருக்கோயிலின் மற்றொரு சிறப்பு. திருக்கோயிலின் ஆனிக்கொடை விழாவின் போது பக்தர்கள் அருகில் உள்ள ஆரல்வாய்மொழி அருள்மிகு மாரிமுத்தாரம்மன் கோயிலிலிருந்து பக்தர்கள் பால்குடம் அக்னிசட்டி, பறவைக்காவடி, அலகு குத்தி ஆடுதல் ஆகிய நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். இரவில் நடைபெறும் பூக்குழிகு விழாவில் நூற்றுஇ விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்குவது அக்னிமாடனின் அருள்சாட்சியாகும். இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் வேண்டுதல்கள் குறிப்பாக குழந்தை பேறு, நோய் நொடிகள் நீங்குதல் போன்ற பிராத்தனைகள் பலிதமாவது அன்னையின் அருளுக்கு நற்சாட்சியாகும். திருக்கோயில் திறந்திருக்கும் நேரம் மற்றும் பூஜை விபரம் இத்திருக்கோயில் அதிகாலை 5.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9.00 மணி வரை நடை திறந்திருக்கும். காலை 7.00 மணி காலை பூஜை மதியம் 1.00 மணி உச்சிகால பூஜை இரவு 7.00 மணி இரவு பூஜை இரவு 9.00 மணி திருகாப்பிடுதல் போக்குவரத்து வசதி மற்றும் அடிப்படை வசதிகள் திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் வழிதடத்தில் காவல்கிணறு சந்திப்பிலிருந்து 2.5 கி.மீ துரத்திலும், நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி வழிதடத்தில் ஆரல்வாய்மொழிக்கு கிழக்கே 2 கி. மீ தூரத்திலும் நெடுஞ்சாலை ஓரத்தில் கிழக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலின் மேற்கேயும் தெற்கேயும் வெவ்வேறு அம்மன் கோயில்கள் தனிநபர்களால் சமீபகாலங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. முப்பந்தல் கிழக்கு அருள்மிகு இசக்கியம்மன் திருக்கோயிலே மூலக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் பக்தர்களுக்கு தேவையான சுத்தீகரிக்கப்பட்ட குடி நீர், ஆண்/ பெண் தனித்தனி கழிப்பிடம் மற்றும் குழியலறை வசதி, பக்தர்கள் தங்கும் மண்டபம் , பொங்கல் மண்டபம் முடிகாணிக்கை மண்டபம் என அனைத்து அடிப்படை வசதிகளும் அறநிலையத்துறையால் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது பக்தர்களின் நலனுக்காக திருக்கோயில் வளாகம் முழுமைக்கும், சுற்றுப்புறங்களிலும் தரைதளம் அமைக்கப்பட்டுள்ளது. பொங்கலிடும் மண்டபம் புதிதாக கட்டப்பட்டுவருகிறது. மேலும் பல திருப்பணிகள் செய்யபட்டு 2018 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழாவும் சிறப்புற நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது . அன்னதானத்திட்டம் இத்திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் 100 நபர்களுக்கும் மற்ற தினங்களில் 50 நபர்களுக்கும் அன்னதானம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் திருக்கோயிலில் நடைபெற்றுவரும் இச்சிறந்த திட்டத்திற்கு 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கிட ரூ. 2500/ ம் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கிட ரூ. 1250/ ம் செலுத்தியும் பங்குபெறலாம் அல்லது ரூ .20000/ நிரந்தர முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டி தொகையிலிருந்து ஒரு நாள் தாங்கள் விரும்பும் நாளில் அன்னதானம் செய்யலாம். உபதிருக்கோயில்கள் இத்திருக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 46111 ன் கீழ் பிரசுரம் செய்யப்பட்ட திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு ஆரல்வாய்மொழி அருள்மிகு மெய்நின்ற விநாயகர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு நயினார் குலசேகர விநாயகர் திருக்கோயில் ஆகியவை உப திருக்கோயில்கள் ஆகும். முக்கிய வருவாய் இத்திருக்கோயிலின் முக்கிய வருவாய் உண்டியல் வருவாயும் , வாகன காணிக்கை குத்தகை மற்றும் பக்தர்களின் அர்ச்சனை முதலான கட்டணசீட்டு விற்பனைமூலம் கிடைக்கிறது. அம்மையின் விழிக்கே அருளுண்டு அருள் செய்து காத்தருள்வாய் முப்பந்தல் தேவி இசக்கியம்மா சுபம் மங்களம் உண்டாகட்டும்
