சிவபுரி உச்சிநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவத்தலமாகும். இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 3வது தலம் ஆகும். அகத்திய முனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த தலமாகும். திருஞான சம்பந்தரும், அவருடன் அறுபத்து மூன்று சைவ அடியார்களும் இத்தலத்திற்கு வரும்பொழுது, உச்சிகாலமானது. அந்நேரம் மிகுந்த பசியோடு இருந்தவர்களுக்கு, இறைவன் கோவில் பணியாளர் வடிவில் வந்து உணவளித்தமையால் உச்சிநாதர் என்ற பெயர்பெற்றார். இக்கோயிலின் அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால் இக்கோயிலை இவ்வூர் மக்கள் கனகாம்பிகை கோயில் எனவும் வழங்குகின்றனர்.