மேலை வெளியில் ஒளிரும் பரஞ்சுடராய் இலங்கும் அழகுக்கு உருவான முருகக் கடவுள் தண்டாயுதபாணி கோலமுற்று நாளும் தமிழ் வளர்க்கும் நான்மாடக் கூடலில் நேதாஜி சாலையின் மேலமாசிவீதி சந்திப்பில் வளமார் வைகை செல்லும் வடதிசை நோக்கு எழுந்தருளியுள்ள திருத்தலமே அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலாகும். தண்டாயுதபாணி சுவாமி சற்றே குனிந்த சாயலில் அழகு ஒளிர் மென் சிரிப்பில் தம்மை மறந்து அவரது தாளைத் தலைப்படாதார் எவரும் இலர். அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீராய் வந்தவரெல்லாம் கந்தனின் கனிவுறு கோலங்கண்டு கதிரொளி கண்டு கரைந்து போகும் பனித் துளியாய் துயர் நீங்கப் பெற்று ஆனந்தப் பெருக்கில் முருகா சரணம் என உருகிச் செல்லும் காட்சியே இத்திருத்தலத்தில் நித்தம் நிகழும் நிகழ்வாகும்.