ஆதிசக்தி அல்லது ஆதிபராசக்தி என்பவள் எல்லாவற்றிற்கும் ஆதி ரூபமாக எல்லோரையும் படைத்த மூலசக்தியாக விளங்குபவள்.தன்னையே சிவம் சக்தி என இரண்டாகப் பிரித்து ஜோதியும் அதன் வெப்பமுமாக விளங்குபவள். சக்தியை முழுமுதற்கடவுளாக வழிபடப்படும் சமயம் மிகப்பழமையான சமயங்களுள் ஒன்றான சாக்தம் ஆகும். தாய் தெய்வ வழிபாட்டின் மிகப்பெரும் எல்லையைக் கடந்துள்ள சக்தி வழிபாடானது, அகிலாண்டம் அனைத்திற்குமே ஆதிசக்தியே தாய் என்று உரைக்கிறது. இதனால் அகிலாண்டேசுவரி என்று ஆதிசக்தி அழைக்கப்படுகிறார். முப்பெரும் தேவியரான கலைமகள், அலைமகள், மலைமகள் ஆகியோர் ஆதிசக்தியின் அம்சமாகவே இந்து தொன்மவியல் நூல்கள் உரைக்கின்றன. அத்துடன் திருமால் ஆதிசக்தியின் ரூபம் என்பதாலேயே மோகினி அவதாரம் எடுத்து சிவபெருமானுடன் ஐயப்பன் என்ற குழந்தையை பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.