`தானத்தில் சிறந்தது அன்னதானம்` என்ற கூற்றை அனைவரும் கேட்டிருப்போம். குறிப்பாக ஆன்மீகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு அளிப்பது நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு இருந்து வந்துள்ளது. அன்னத்தை துவேஷிக்கக் கூடாது. அன்னத்தை மிகுதியாக உண்டாக்க வேண்டும். அன்னத்தை வேண்டி வந்த எவரையும் தள்ளிவிடக் கூடாது. ஆகையால் எவ்விதத்திலாவது மிகுதியாக அன்னத்தை தேடிக் கொள்ள வேண்டும். வருபவர்களுக்கு அன்னம் தயாராக இருக்கிறதென்று சொல்லுவர் பெரியோர். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரத ரிஷிகளின் சமூக சிந்தனைதான். பசியற்ற பாரதத்தைக் காண விழையும் சிந்தனை. வயிற்றுக்கு சோறிடல் வேண்டும். இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற சிந்தனையால் விளைந்ததே அன்னதானம் என்கிற உயரிய தானம். `நீங்கள் மிகுந்த பசியில் இருக்கும்போது உங்கள் தட்டில் உள்ள உணவினை உங்கள் அருகில் பசியில் இருப்பவருக்கு வழங்கினால் உங்கள் பலம் அந்த உணவு உண்பதைக் காட்டிலும் அதிகமாகும்` என்று புத்தர் தன் சீடர்களுக்கு கூறினார். உண்மையில் இது வெறும் தத்துவமல்ல. இதனை நம் அனுபவப் பூர்வமாகவே பார்க்க முடியும். நாம் பிறருக்கு ஏதேனும் ஒன்றை வழங்கும்போது கிடைக்கக் கூடிய அற்புத உணர்வினை நம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அதிலும் உணவு என்பது மனிதனின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக உள்ளது. நாம் பிறருக்கு வழங்கும் உணவு, அவரின் வாழ்வை நீட்டித்துக்கொள்ளும் சக்தியை அவருக்கு வழங்குகிறது. அன்னதானம் நம் கலாச்சாரத்தில் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு அற்புதத் தன்மையாகும். இது நம் கலாச்சாரத்தில் ஆன்மீக வளர்ச்சிக்கான பாதையாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு உத்தரவின்படி இத்திருக்கோயிலில் தினந்தோறும் 25 நபர்களுக்கு அன்னதானம், அதற்கென ஒதுக்கப்பட்ட கூடத்தில் சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறது. நிரந்தர கட்டளை முதலீட்டின் மூலம் பெறப்படும் வட்டித் தொகையைக் கொண்டும் அன்னதானம் வழங்கப்படுகின்றது.