வண்டியூர் மாரியம்மன் திருக்கோயில், கோயில் நகரமான மதுரையின் கிழக்கே 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் ஆகும். இக்கோயிலுக்கு வடக்கே வைகை ஆறும், தெற்கே மாரியம்மன் தெப்பக்குளமும், மேற்கே தியாகராசர் கலைக்கல்லூரியும் அமைந்துள்ளன. பிற அம்மன் கோயில்களில் இல்லாத விதமாக இங்கு அம்மன் வலக்காலை இடக்காலின் மீது மடக்கிய நிலையில் எருமை தலையுடன் உட்கார்ந்த நிலையிலும், உற்சவ அம்மனாக நின்ற நிலையிலும் உள்ளார். மூலவராக மாரியம்மன் இருப்பதால் வேறு பரிவார தெய்வங்கள் கிடையாது. அரசமரத்தின் அடியில் விநாயகர் மற்றும் பேச்சியம்மன் மட்டும் இருக்கின்றனர். இரண்டு துவாரகபாலகர்கள் வாயில் நிற்க அம்மன் சன்னதியும், அதற்கு முன்புறம் அகலமான முற்றமும் கொண்டுள்ளது.