நில உலகின் திருமுகமாய், பல கலைகள் பல மதங்கள் செழித்தோங்கும் நம் பாரதப் பொன்னாட்டின் தென் கோடியில் ஆன்மீகத்தின் அரணாய்ப் பொலிவது நம் அருமைத் தமிழ்நாடு. இத் தமிழகத்தில் பல்வகைச் சிறப்பும் பாங்குறத் திகழும் கொங்கு மண்டலத்தின் மேற்புற எல்லையாகத் தென்வடலாக நீண்டு கிடத்கும் மேற்கு மலைத் தொடரின் தென்பால் அமைந்திருக்கும் அழகு தவழும் ஆனைமலைத் தொடரின் அடியில் அமைந்திருக்கிறது பொள்ளாச்சி நகரம் . இந்த நகர் அமைந்துள்ள புவியியல் சிறப்பால், தென்மேற்குப் பருவ மழையும், வடகிழக்குப் பருவ மழையும் ஆண்டுதோறும் கைகோர்த்துக் கொண்டு பெய்யும் அப்புற நிலப் பாங்கினால், நிலம் குளிர்ந்து மரம் உயர்ந்து, செடி செழித்து, கொடி தழைத்து எங்கு நோக்கினாலும் வாசம் நிறைந்த பொழிலாய்த் தோற்றம் தந்தது...