


தல வரலாறு
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் 48, முல்லா தெரு, சென்னை-79. பச்சைமாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் ...அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் 48, முல்லா தெரு, சென்னை-79. பச்சைமாமலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே என்று தொண்டரடிப் பொடியாழ்வாராலும் அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே என்று திருப்பாணாழ்வாரும் அரங்கனையே தங்கள் பாட்டுடைத் தலைவனாக வணங்கி வாழ்ந்தார்கள். இதனால் தான் தொண்டரடிப்பொடியாழ்வார்பத்தினி ஆழ்வார் என்று போற்றப்பட்ட பெருமை வாய்ந்தவர். அரங்கனை தவிர வேறு எந்த பெருமானும் அவருக்குத் தெரியாது. இப்படிப்பட்ட அரங்கனுக்கு சென்னையில் சௌகார் பேட்டை- 48, முல்லா தெருவில் ஒரு திருக்கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 வருடங்களுக்கும் மேலான தொன்மை வாய்ந்த இத்திருக்கோயிலில் திருவரங்கத்தைப் போல் பள்ளி கொண்ட ரங்கநாதர் காட்சியளிக்கிறார். திருவரங்கம் அரங்கனுக்கும் இவருக்கும் பெயரில் தான் ஒற்றுமையே தவிர பல விதங்களில் சென்னை அரங்கன் மாறுதலாக காட்சியளிக்கிறார். சிறிய திருமேனி, சதுர்புஜங்களுடன், சங்கு சக்கரங்கள் தாங்கியும், வலது கை அபயஹஸ்தமாகவும், இடது திருக்கரம் கடி ஹஸ்தமாகவும், சேஷ சயனத்தில் பால ரங்கநாதரின் காட்சி நம்மை பரவசப்படுத்தும் நிலை. நாபிகமலத்திலிருந்து பிரம்மா திருவடியில் தாமரையுடன் மற்றும் பெருமாளின் திருவடியருகில் ஸ்ரீதேவியும், பூதேவியும் காட்சியளிக்கின்றனர். வடக்கே தலைவைத்து வடக்கு தெற்காக சயன கோல உற்சவரும். ஸ்ரீ தேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார். ராஜகோபுரம் இல்லை. ஆனால் ரங்கநாதரின் கருவறை விமானம் ஸ்ரீ ரங்கத்தைப் போன்ற ரங்க விமானம் அல்லது பிரணவாகார விமானம் போன்ற அமைப்பு, விமானத்தில் பள்ளி கொண்ட பெருமாள், கீதோபதேசக் காட்சி, ராமன் மற்றும் தசாவதார சிற்பங்கள் மற்றும் ஆழ்வாராதிகளின் சிற்பங்களைக் காணலாம். கோயிலின் முன் பக்க மண்டபத்தின் முன்பாக துவஜஸ்தம்பம், அதைத்தாண்டி மண்டபத்தில் இருபக்க சன்னதிகளில் ஆழ்வார், ஆசார்யர்கள் சன்னதி அமைந்துள்ளது. ஆழ்வார், ஆசார்யர்களுக்கு கோயிலைச் சுற்றி சன்னதி அமைந்திருந்தாலும் பாதுகாப்பு காரணமாக அனைத்து ஆழ்வார் ஆசார்யர்களின் உற்சவ திருமேனிகளை இந்த சன்னதிகளிலேயே தரிசிக்கலாம். இரு சன்னதிகளின் நடுவில் அரங்கன் சன்னதி அமைந்துள்ளது. பெருமாள் சன்னதியின் வலது பக்கம் பெரிய மண்டபத்துடன் கூடிய அமைப்பின் முடிவில் முறையே நடுவில் ரங்கநாயகித் தாயாரின் சன்னதி அமைந்துள்ளது. தாயாரின் இடது பக்க சன்னதியில் ஸ்ரீபட்டாபிராமன் சன்னதி அமைந்துள்ளது. பட்டாபிராமன் சன்னதியில் பல விசேஷங்களைக் காணலாம். மூலவர் ராமர் நடுவில் நின்ற கோலத்திலும் தமக்கு வலப்புறத்தில் சீதாபிராட்டி மற்றும் பரததாழ்வான் காட்யளிக்க, ராமனின் இடது பக்கத்தில் இளைய பெருமானாக லஷ்மணன் மற்றும் சத்ருக்ணாழ்வார் காட்சியளிக்கிறார்கள். மூலஸ்தானத்தில் ஹனுமார் இடம் பெறவில்லை. மூலவரைப் போன்றே உற்சவ மூர்த்தங்களும் நின்ற திருக்கோலம் உற்சவரும் சீதை, பரதன், லஷ்மணன், சத்ருக்ணன் என்று குடும்ப சகிதமான காட்சி, உற்சவர்களில் இரண்டு ஆஞ்சநேயர்கள் காட்சியளிப்பது மற்றுமொரு சிறப்பு. ஒரு ஹனுமான் பக்தாஞ்சநேயராகவும், மற்றொரு ஹனுமார் வாகன சேவையாய் (அமைப்பில்) கைகளில் ராமபாதுகைகளைத் தாங்கி காட்சியளிக்கிறார். ராமர் சன்னதிக்கெதிரில் பக்த ஆஞ்சநேயர் சன்னதி அமைந்துள்ளது. தாயாரின் வலது பக்க சன்னதியில் ருக்மணி சத்யபாமாவுடன் வேணுகோபாலன் காட்சியளிக்கிறார். மூவரையும் சேர்த்து ஒன்றாக வலம் வந்தால் ரங்க விமான சேவை தொடர்ந்து இடது பக்கத்தில் வரதராஜ பெருமாள், ஆண்டாள் மற்றும் ஸ்ரீநிவாஸர் சன்னதிகள் அமைந்துள்ளன. இங்கும் விசாலமான மண்டபம் அமைந்துள்ளது. திருவிழாக்கள் இம்மண்டபத்தின் தான் கொண்டாடப்படுகின்றன. இம்மண்டபத்தின் முடிவில் யோக நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. மூலவர் சோளிங்கர் யோக நரசிம்மரைப் போல காட்சியளிக்கிறார். மேலும் உற்சவரும் சோளிங்கபுர உற்சவர் போல் இடது திருக்கரம் ஆஹ்வான ஹஸ்தமாக (அழைத்து அருளும் பாவம்) காட்சியளிக்கிறார். நரசிம்மர் மேற்கு நோக்கி காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு. மேலும் மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்கலாம். சோளிங்கரிலோ மூலவர் மலையிலும் உற்சவர் ஊர் கோயிலிலும் எழுந்தளியிருப்பதால், சில விசேஷ உற்சவ காலத்தில் மட்டும் தான் இருவரையும் ஒன்றாக தரிசிக்கலாம். அதே போன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் நரசிம்மர், மூலவரையும் உற்சவரையும், ஒன்றாக தரிசிக்கலாம். உற்சவங்கள் விவரம்: 1. சித்திரை மாதம்: எம்பெருமானின் உற்சவமும், ராமர் உற்சவமும் பத்து நாட்கள் நடைபெறும். 2.வைகாசி மாதம்: வசந்த உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும் 3. ஆனிமாதம்: பெரியாழ்வார் சாற்றுமுறையும், நாதமுனி சாற்று முறையும் தொடர்ந்தாற்போல் நடைபெறும். 4.ஆடிமாதம்: திருவாடப்பூரம் உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும் 5.ஆவணி மாதம்:பவித்ர உற்சவம் ஐந்து நாட்கள் நடைபெறும். 6. புரட்டாசி மாதம்: ரங்கநாச்சியார் உற்சவம் பத்து நாட்கள் நடைபெறும். 7.ஐப்பசி மாதம்: மணவாள மாமுனிகள் சாற்று முறை, பொய்கையாழ்வார் சாற்று முறை, பூதத்தாழ்வார் சாற்று முறை, பேயாழ்வார் சாற்று முறை, சேனை முதலி சாற்று முறை நடைபெறும் 8.கார்த்திகை மாதம்: தீப உற்சவம் நடைபெறும். 9. மார்கழி மாதம்: அத்தியாய உற்சவம் பகல் பத்து நாட்கள் ஆன பிறகு பதினொன்ராம் நாள் வைகுண்ட ஏகாதசி இரவு பத்து நாட்கள் விழாவும் ஆண்டாள் நீராட்டு உற்சவமும் நடைபெறுகிறது. 10.தைமாதம்: திருமழிசை ஆழ்வார் சாற்று முறை நடைபெறும். வைகுண்ட ஏகாதசி ஒரு சமயம் பிரளயத்தில் (வெள்ளம்) மூழ்கிய உலகத்தை மறுபடியும் உண்டாக்க விரும்பிய திருமால் பிரம்மாவைச் சிருஷ்டித்தார். அந்த பிரம்மாவை சம்ஹாரம் செய்ய இரண்டு அசுரர்கள் வந்தார்கள். சண்டைக்கு வந்த அவர்களை வதம் செய்த திருமாலிடம் நாங்கள் உம் அருளால் சித்தி பெற்று ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்ய வேண்டும் என்று வேண்டினார்கள். அவர்கள் வேண்டுகோளை ஏற்ற திருமால் மார்கழி சுக்லபடி ஏகாதசியன்று வடக்கு நுழைவாயிலைத் திறந்து அதன் வழியாக சத்யலோகத்திற்கு மேலுள்ள பரமபதத்திற்கு அந்த அசுரர்களை அனுப்பினார். அப்போது அந்த அசுரர்கள் மார்கழி சுக்ல ஏகாதசியன்று எங்களுக்கு அருளிய சொர்க்கவாசல் திருநாளை மக்கள் அனைவரும்சிறந்த உற்சவமாக பூவுலகில் திருத்தலங்களில் கொண்டாட வேண்டும். அன்று அவ்வாசல் வழியே எழுந்தருளும் ஸ்ரீமந் நாராயணனைத் தரிசிப்பவர்களுக்கு, பகவானோடு கூட அவ்வாசல் வழியாக வெளி வருவோருக்கும் எவ்வளவு பாவிகளாயிருந்தாலும் மோஷம் பெற வேண்டும் என்று பிரார்த்தித்தனர். திருமாலும் அனுக்கிரஹித்தபடியே பூவுலகில் திருமால் திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. நம்மாழ்வார் மோட்ஷம் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமால் திருத்தலங்களில் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு பத்து நாள்களும் வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு பத்து நாள்களும் பகல் பத்து. இராப்பத்து என்ற உற்சவங்கள் நடைபெறும். அப்போது திருக்கோயில் எம்பெருமான் பிரதானமாக காட்சி தர அவரைச் சுற்றி ஆழ்வார்களும் ஆசார்ய புருஷர்களும் எழுந்தருளியிருப்பார். இராப்பத்து கடைசி நாளில் நம்மாழ்வார் முக்தி அடைவதாகவும் மீண்டும் நம் பொருட்டு பெருமாள் அவரை நமக்கு திரும்ப அளிப்பதாகவும் திருவிழாவின் கருத்தாகும். ஆழ்வார் கோஷ்டியிலுள்ள நம்மாழ்வரை இரண்டு அர்ச்சகர்கள் கைத்தங்கலாக எழுந்தருளச் செய்து பெருமாள் திருவடியருகில் சேர்ப்பார்கள். அப்போது ஆழ்வார் திருவுருவம் முழுவதுமாக திருத்துழாயால் மறைக்கப்படும். இது நம்மாழ்வார் மோஷம் அடைந்ததைக் குறிக்கும். பிறகு நம் சார்பில் உலகம் உய்ய பெருமாளிடம் அர்ச்சகர் நம்மாழ்வாரைத் தந்தருள வேண்டும் என்று பிரார்தனை செய்வார். அப்போது சில குறிப்பிட்ட திவ்ய பிரபந்தங்கள் ஓதப்படும். பிறகு துளசிதளங்கள் களைப்பட்டு நம்மாழ்வாருடன் பெருமாள் தரிசனம் தருவார். பிறகு நம்மாழ்வாரை அர்ச்சர்கள் மீண்டும்ஆழ்வார்கள் கோஷ்டியில் சென்று அமர்த்துவர். இத்திருக்காட்சியை தரிசிப்பவர்களுக்கு திருமாலின் பூரண அருள் கிடைக்கும். காலம் நாள் திருக்கோலம் பகல் பத்து1ஆம் நாள் கோதண்டராமர் திருக்கோலம் பகல் பத்து2ஆம் நாள் சுபாங்கம் பகல் பத்து3ஆம் நாள் பரமபதநாதர் பகல் பத்து4ஆம் நாள் ராஜமன்னார் பகல் பத்து5ஆம் நாள் வேணு கோபாலன் பகல் பத்து6ஆம் நாள் ஏணி கண்ணன் பகல் பத்து7ஆம் நாள் தவழ்ந்த கண்ணன் பகல் பத்து8ஆம் நாள் யசோதா கண்ணன் பகல் பத்து9ஆம் நாள் மலை கண்ணன் பகல் பத்து10ஆம் நாள் நாச்சியார் திருக்கோலம் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் எழுந்தருளல் இராபத்து2ஆம் நாள்சயன திருக்கோலம் இராபத்து7ஆம் நாள் நம்மாழ்வார்-நாச்சியார் திருக்கோலம் இராபத்து9ஆம் நாள் சயன திருக்கோலம் இராபத்து10ஆம் நாள் நம்மாழ்வார் மோட்ஷம் இங்கு எழுந்தருளப்பட்டுஎன்ற இத்திருக்கோயிலுக்கு திருவல்லிக்கேணி திவ்யதேசத்தின் அபிமானத்தலம் என்ற பெருமை ஏற்பட்டதாக பல முதியவர்களின் மூலம் தெரிகிறது. இன்றும் பார்த்தசாரதிப் பெருமானின் உற்சவ மூர்த்தியை (கௌத்துவராக) அரங்கன் சன்னதியில் தரிசிக்கலாம். ஆக இத்தலத்தில் கோயில் (ஸ்ரீரங்கம்) திருமலை (திருப்பதி) பெருமாள் கோயில் (காஞ்சி) எம்பெருமான்களும் ராமர், கிருஷ்ணன் சன்னதிகளும் நாழிகைப் பொழுதில் நலம் தரும் நரசிம்மபெருமானும் எழுந்தருளி நம்மை காக்கிறார்கள்என்றால் மிகையாகாது. அருள்மிகு ரங்கநாயகி தாயார் மிகவும் வரப்பிரசாதியாய் தன்னை நாடுபவர்களுக்கு நல்லருள் புரிகிறாள். வைகானஸ ஆகமப்படி இத்திருக்கோயிலில் அனைத்து எம்பெருமான்களுக்கும், தாயாருக்கும் ஆழ்வார் ஆசார்யர்களுக்கும் அவ்வப்போது மாச, பஷ, வருட உற்சவங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் அறநிலையத்துறையின் பராமரிப்பில் விளக்குகிறது இத்திருக்கோயில். திருப்பணி விவரம் 3.12.1959 திருக்கோயிலின் விமானத் திருப்பணிக் கட்டிடம் ஆரம்பிக்கப்பட்டு, 9.3.1960ல் நிறைவு செய்யப்பட்டுள்ளது. எனவே மேற்படி திருக்கோயிலில் ஆரம்பிக்கப்படும் எந்த திருப்பணியும் உடனடியாக நிறைவு பெறும். தற்போது தசாவதார மண்டபம், அற்புதமான ரங்கவிமானம் திருப்பணி செய்யப்பட்டால் கோயில் மிகவும் சிறப்புடையதாகும். பூஜை காலங்கள்: காலை 7.00 மணிக்கு விஸ்வரூப தரிசனம் 7.30 மணி முதல் 8.30 மணிவரை திருவாராதனம். 11.30 மணி வரை உச்சிகாலம். மாலை 5.00 மணி முதல் 5.30 வரை திருமால்வடை, மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை திருவாராதனம். விசேஷகாலங்களில் நித்திய கால பூஜைகள் மாறுதலுக்கு உட்பட்டது. திருக்கோயில் திறந்திருக்கும் நேரம் காலை 7.00 மணி முதல் 11.00 வரை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை.
